Sunday 17 July 2016

ஆதி மனிதன் ஆதாம் !



ண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார்.  – ஆதியாகமம் 2 : 7
“ஒளி தோன்றுக !” உலகத்தைப் படைக்கும் போது கடவுள் சொன்ன முதல் வார்த்தை இது தான். அடுத்த நாள் வானத்தைப் படைத்தார். மூன்றாம் நாள் கடலையும், நிலத்தையும் நிலத்தின் தாவர இனங்களையும் படைத்தார்.  நான்காம் நாள் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைக்கிறார். ஐந்தாம் நாள் வானத்துப் பறவைகள், நிலத்து விலங்குகள், தண்ணீரின் உயிரினங்கள் போன்றவை படைக்கப்படுகின்றன.
ஆறு நாட்கள் கட்டளைகளின் மூலமாக அனைத்தையும் படைத்த கடவுள் கடைசியில் மனிதனைப் படைக்க முடிவெடுக்கிறார். “மனிதன் தோன்றட்டும்” என அவர் ஒரு வார்த்தையில் அவனைப் படைக்கவில்லை.
கொஞ்சம் மண்ணை எடுத்து, அதை ஒரு மனித உருவமாய்ச் செய்து, தனது உயிர் மூச்சை ஊதி அவனுக்கு உயிர் கொடுக்கிறார். உலகின் முதல் மனிதன் உயிர்பெறுகிறான். கடவுளின் இயல்புடன், கடவுளின் சாயலில், கடவுளின் ஆவியுடன் ! அவன் தான் ஆதாம் ! ஆதாம் என்பதற்கு “மண்ணால் ஆனவன்” என்று பொருள்.
அவனுக்காய் ஏதேனில் ஒரு தோட்டம் உருவாக்கி அவனை குடியமர்த்தினார் கடவுள். அந்தத் தோட்டத்தில் கண்ணைக் கவரும் பழ மரங்கள் நிரம்பி வழிந்தன.
தோட்டத்தின் நடுவே இரண்டு மரங்கள். ஒன்று வாழ்வின் மரம். இன்னொன்று, நன்மை தீமை அறியும் மரம். “இந்தத் தோட்டத்தில் எதை வேண்டுமானாலும் சாப்பிடு, நன்மை தீமை அறியும் மரத்தின் கனி மட்டும் வேண்டாம். அதைச் சாப்பிட்டால் நீ சாகவே சாவாய் ! “ இதுதான் மனிதனுக்குக் கடவுள் தந்த முதல் கட்டளை.
விலங்குகளையும், பறவைகளையும்  படைத்தவர் கடவுள் தான். ஆனால் அவற்றுக்குப்  பெயர் சூட்டியவன் ஆதாம் ! தனக்குப் பிடித்த பெயர்களை அவற்றுக்கு இட்டான். மனிதனின் முதல் பணி பெயர் சூட்டு விழா தான் !
பின் கடவுள், ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கம்  வரச் செய்தார். அவனுடைய விலா எலும்பில் ஒன்றை எடுத்தார். அந்த எலும்பைப் பெண்ணாகச் செய்து ஆதாமுக்குத் துணையாகக் கொடுத்தார்.
துணையானவள், ஆதாமுக்கு இணையானவளாக இருக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அதனால் தான் விலா எலும்பிலிருந்து அவளைப் படைக்கிறார். தலையிலிருந்து படைத்து ஏவாளைத் தலைவியாக்கவோ, காலிலிருந்து படைத்து அவளை அடிமையாக்கவோ இல்லை. விலாவிலிருந்து படைத்து இணையாக்குகிறார்.
ஆதாமுக்கு கடவுள் இட்ட கட்டளை, “படைப்புகள் அனைத்தையும் ஆண்டு நடத்த வேண்டும்” என்பதே. அதாவது, அனைத்துக்கும் தலைவனாகவும், அதிகாரம் மிக்கவனாகவும் ஆதாமே நியமிக்கப் படுகிறான் !
படைப்பின் முழுமை ஆதாம் ஏவாளின் படைப்புடன் முழுமையடைகிறது. ஆறாவது நாளில் மனிதப் படைப்பு முடிவடைய, ஏழாவது நாள் கடவுள் ஓய்வு நாள் என அறிவிக்கிறார். அதாவது, கடவுளுக்கு கடைசி நாள் ஓய்வு நாள். மனிதனுக்கோ! ஓய்வுடன் தான் துவங்குகிறது முதல் நாள்.
பாவம் எனும் சாயல் எதுவுமே இல்லாமல் பிறந்த ஒரே மனிதன் ஆதாம் தான். மழலையாய் பிறக்காத ஒரே மனிதனும் ஆதாம் தான். பெற்றோர் இல்லாமல் பிறந்த ஒரே மனிதனும் ஆதாம் தான்.  அதனால் தான் முன்னோர் செய்த பாவத்தின் நிழலும் அவனிடம் இல்லை. அவனே ஆதித் தந்தை !
ஆதாமைப் பொறுத்தவரை எல்லாமே அவனுக்கு முதல் அனுபவங்கள். அவனுக்கு புரட்டிப் பார்க்க முந்தைய வரலாறுகள் இல்லை. பாவம் என்றால் என்ன ? மீறுதல் என்றால் என்ன ? சாவு என்றால் என்ன ? என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது.
எதையுமே தெரியாத நிலை மனிதனை இறைவனோடு நெருக்கமாய் உறவாட வைக்கிறது. தன்னால் எல்லாம் செய்ய இயலும் எனும் தன்னம்பிக்கை உருவாகும் போது அவன் கடவுளை விட்டு விலகிச் செல்கிறான்.
இறைவன் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு திட்டம் வைத்திருக்கிறார். அது யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இனிமையானதும், மன நிம்மதி தரக்கூடியதுமான வாழ்க்கையாகும். ஆனால் மனிதன் இறைவனை விட்டு விலகி பாவத்தின் வழியில் செல்லும் போது தனக்கென வழியை அவனே உருவாக்கிக் கொள்கிறான். இறைவனின் விரலை விட்டு விடும் மனிதன், திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து விடும் சிறுவனைப் போல விழிக்கிறான். கிடைக்கும் சின்னச் சின்ன வாழ்க்கை அனுபவங்களை வெற்றியென்றோ, சாதனையென்றோ பேசித் திரிகிறான்.
உண்மையில், இறைவனை விட்டு விலகித் திரிகையில் நாம் இழப்பவையே அதிகம். நிலையான விண்ணக வாழ்வு உட்பட.

No comments:

Post a Comment